அரியலூர் மாவட்டம் சோழன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மகள் திவ்யாவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில்  கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் திவ்யா தனது கணவரை பிரிந்து தந்தை வீட்டில் இருந்து கொண்டே அரியலூர் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் திவ்யாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த அன்பரசு என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு இரு தரப்பினரும் மறுப்பு தெரிவித்தனர். கடந்த வாரம் அன்பரசு திவ்யாவை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். பின்னர் புதுமண தம்பதியினர் அன்பரசுவின் வீட்டில் தங்கி இருந்தனர்.

நேற்று முன்தினம் வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால் அக்கம் பக்கத்தினர் நீண்ட நேரமாக கதவை தட்டி உள்ளனர். ஆனால் யாரும் வெளியே வரவில்லை. இதனால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர் அப்போது அன்பரசுவும், திவ்யாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.