
திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதி சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் கயல்விழி. இவர் கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவிலுக்கு செல்வதாக ஒரு வீட்டில் இருந்து புறப்பட்ட சென்ற கயல்விழி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் கயல்விழியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் கயல்விழி கடைசியாக சந்தித்த சிலரை பிடித்து விசாரித்தனர். ஆனால் இந்த வழக்கில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து போலீசார் அவர்களை கண்காணித்து வந்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவசாமி என்பவரை படித்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அவர் கயல்விழியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கயல்விழி கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் மாந்திரீகவாதியான சிவசாமியை அணுகியுள்ளார்.
அவர் சில போலியான பரிகாரங்கள் செய்து கயல் விழியிடமிருந்து பணத்தை வாங்கியுள்ளார். ஆனால் கணவருடன் கயல்விழி சேரவில்லை. இதனால் கோபமடைந்த கயல்விழி சிவசாமியை சந்தித்து தொடர்ந்து தொந்தரவு அளித்ததாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த சிவசாமி தனது உறவினர்களான கண்ணன், மாயாண்டி ஆகியோருடன் இணைந்து சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என கூறி கயல்விழியை தனியாக வர சொல்லி சுசீந்திரம் பகுதிக்கு காரில் அழைத்து சென்றுள்ளனர்.
அதன் பிறகு காரில் வைத்து கயல் விழியின் கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது நகைகளை திருடி மணிமுத்தான்குளம் கால்வாயில் யாருக்கும் தெரியாமல் வீசி சென்றது தெரியவந்தது. தற்போது இளம் பெண்ணின் உடலை போலீசார் தேடி வருகிறார்கள்.