மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் நடந்த  ஒருவர் கொலை வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அரவிந்த் என்ற நபரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருடைய மனைவி கணேஷி பாயால் என்பவர் கொலை செய்துள்ளார். தலையில் கல்லால் தாக்கி கொலை செய்த பின்னர், அவரது உடலை ஒரு குளத்தில் வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் கணவர் நீரில் மூழ்கி மரணம் அடைந்ததாக பொய் கூறிய மனைவி, போலீசாரின் தீவிர விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையில் பலத்த காயம் இருப்பது தெரியவந்ததும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

விசாரணையின் போது, தினசரி குடும்பத் தகராறால் மன உளைச்சலை எதிர்கொண்ட கணேஷி பாய், கோபத்தில் கணவரை கொன்றதாக தெரிவித்தார். சம்பவத்துக்குப் பிறகு தனது கணவர் தவறி குளத்தில் விழுந்ததாக கூறியிருந்தாலும், அவர் கணவரை கொலை செய்து உடலை குளத்தில் வீசியது அம்பலமாகியுள்ளது. போலீசார் அதர்தல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியான மனைவியை கைது செய்துள்ளனர். இதனால் அந்த பகுதி மக்களில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.

இந்த சம்பவம், மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நிகழ்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கை நினைவூட்டுகிறது. ராஜா தனது மனைவி சோனம் ரகுவன்ஷியுடன் மே 11ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டு, மே 21ஆம் தேதி மேகாலயா தேனிலவுக்குச் சென்றார். மே 23ஆம் தேதி சோனத்தின் காதலர் ராஜ் குஷ்வாஹா மற்றும் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ராஜாவை திட்டமிட்டு கொலை செய்தனர். இந்த கொலை நாட்டையே உலுக்கியது.

ராஜாவின் உடல் ஜூன் 2ஆம் தேதி ஒரு பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், அவரது தலையில் ஆழமான காயங்கள் மற்றும் இரண்டு கத்திகள் பயன்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இவ்வாறான தொடர்ச்சியான கணவர் கொலை வழக்குகள் மத்தியப் பிரதேசத்தில் தற்போது பரபரப்பை உருவாக்கியுள்ளன. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.