கன்னியாகுமரி மாவட்டம் தடிகாரகோணம் பகுதியைச் சேர்ந்தவர் வினு. இவர் இந்திரா நகர் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் தினமும் மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்து விட்டு 4 மணிக்கு கடைக்கு வருவது வழக்கம். அந்த சமயம் வினுவின் மனைவி கடையை பார்த்துக் கொள்வார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 39 வயதுடைய கூலி தொழிலாளி விஜய் என்பவர் கடைக்கு டீ குடிக்க வந்தார். அவர் வினு கடையில் இல்லாததை அறிந்து அவரது மனைவியிடம் ஆபாசமான வார்த்தைகளால் பேசி சைகை காட்டி அத்துமீற முயன்றார்.

இதுகுறித்து அந்த பெண் தனது கணவர் வினுவிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு கோபமடைந்த வினு விஜயை தனியாக அழைத்துச் சென்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். சம்பவம் நடந்த அன்று விஜய் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் வினு விஜயுடன் தகராறு செய்துள்ளார்.

இதில் கோபமடைந்த விஜய் வடை போட வைத்திருந்த கொதிக்கும் எண்ணையை வினு மற்றும் அவரது மனைவியின் மீது ஊற்றிவிட்டு தப்பி சென்றார். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த விஜயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.