உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்‌. அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் நடக்கும் இரு மொழிக் கொள்கை குறித்த பிரச்சனை குறித்து நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கூறியதாவது, நாட்டில் மொழி மற்றும் மதத்தின் அடிப்படையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தக் கூடாது. பிரதமர் நரேந்திர மோடி காசி தமிழ் சங்கத்தை வாரணாசியில் ஏற்படுத்தியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு இந்தியர்களும் தமிழ் மொழியின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். சமஸ்கிருத மொழியை போன்று தமிழும் மிகவும் பழமையான மொழி. தேர்தலில் ஓட்டு பெறுவதற்காக தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்து நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார்கள். தமிழகத்தில் வாக்குக்காக மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். வாக்கு வங்கி அபாயத்தில் இருக்கும்போது மொழி அரசியல் உருவாகிறது. மேலும் மொழி மற்றும் பிராந்தியங்களை வைத்து பிரித்தாலும் சூழ்ச்சி நடைபெறுகிறது என்று கூறினார்.