
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் தவுந்த் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் சுனில் பெலிராவ்(44) மற்றும் அதிகா (37) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பரசுராம் என்ற 18 வயது மகன் ஒருவர் உள்ளார். இந்த நிலையில் காய்ந்து கொண்டிருந்த துணியை எடுக்கச் சென்றபோது அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து இவர்கள் மூன்று பேரும் உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியது. அதாவது சுனிலின் வீடு அருகே உள்ள மற்றொரு வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்கான கேபிள் கம்பி ஒன்று சுனில் வீட்டு மீது விழுந்து கிடந்தது.
இந்த கேபிளை ஆதரவாக பிடித்திருந்த இரும்பு தடி ஒன்று வளைந்து இருந்த நிலையில் அதிலிருந்து மின்சாரம் வெளியேறி சுனில் வீட்டின் தகரக் கூரை மீது பாய்ந்துள்ளது. அந்தக் கூரைக்கு அருகே உலோக வயர் ஒன்றில் சுனில் குடும்பத்தினர் துணிகளை காய போட்டு இருந்த நிலையில் அந்த உலோக கம்பியிலும் மின்சாரம் பயந்துள்ளது. இது எதுவும் தெரியாமல் துணிகளை எடுப்பதற்காக சுனில் சென்ற நிலையில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த பரசுராம் தந்தையை காப்பாற்ற முயன்ற நிலையில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைக் கண்ட ஆதிகா குடும்பத்தினரை காப்பாற்ற முயற்சித்த போது அவர் மீது மின்சாரம் தாக்கிய நிலையில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.