பெரியமேட்டில் குவாட்டர் மதுவை கடனாக கேட்டதற்காக வாலிபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 26 வயதான பிரேம்குமார் என்ற இளைஞர் தனது நண்பர் கபிலுடன் மதுக்கடைக்கு சென்றிருந்தார். டாஸ்மாக் கடைகள் மூடியிருந்ததால், சட்டவிரோதமாக கூட கூடுதல் விலையில் மது விற்கும் சுமதி என்ற பெண்ணின் சந்துக்கடையில் மதுவை வாங்கச் சென்றுள்ளார்.

அங்கு பிரேம்குமார், சுமதியிடம் ஒரு குவாட்டரை கடனாக கேட்டதால் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர் சுமதியிடம் கேள்வி கேட்டதோடு, அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து சுமதி, தனது மகன் தீனா மற்றும் பாஜக உறுப்பினரான மருமகன் விஜய் நாராயணனிடம்  நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து, தீனா, விஜய் நாராயணன் மற்றும் மேலும் இருவர் பெரியமேட்டிலுள்ள பிரேம்குமாரின் வீட்டு முகவரிக்கு சென்று, அவரை தாக்கிய பிறகு ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளனர்.

செல்லும் வழியில் முகத்தில் கத்தியால் வெட்டி, சாலையோரத்தில் தூக்கி வீசி தப்பிச் சென்றனர். காயமடைந்த பிரேம்குமாரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தபோதும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சந்துக்கடை வைத்திருந்த சுமதி, அவரது மகன் தீனா, பாஜக உறுப்பினர் விஜய் நாராயணன் மற்றும் அவரது கூட்டாளிகள் ஜீவா, கண்ணதாசன் ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த கொடூரக் கொலை சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.