அமெரிக்காவின் ஸ்பிரிட் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பெண்கள், விமான பணிப்பெண்ணுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நிகழ்ந்தது விமானம் புறப்படுவதற்கு முன்பாக, பணிப்பெண் விமானம் நியூயார்க் செல்லும் என்று சொல்லுவதற்கு பதிலாக நியூ ஓர்லீன்ஸ் செல்கிறது என்று தெரிவித்ததிலிருந்து துவங்கியது. இந்த பிழைக்கு  அவர் மன்னிப்பு கேட்டபோதும், அந்த மூன்று பெண்கள் தொடர்ந்து வாதத்தை கிளப்பினர்.

பணிப்பெண் அவர்கள் பைகளை சீட்டின் கீழ் வைக்கச் சொன்னபோது, அவர்கள் அதை தவிர்த்து, மீண்டும் தவறான அறிவிப்பை பற்றியே விவாதத்தில் ஈடுபட்டனர். பணிப்பெண் சினமடைந்து, “இந்த நடத்தை காரணமாக உங்களை விமானத்திலிருந்து இறக்க வைக்கிறேன். இது எனக்குச் சாதாரணம்” என கூறினார்.

இந்த வாக்குவாதம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் விமானத்துக்குள் வந்த பிறகும், அந்த பெண்கள் விமானத்திலிருந்து இறங்க மறுத்தனர். போலீசார் “விமானத்திலிருந்து இறங்குங்கள், இல்லையெனில் கைது செய்யப்படுவீர்கள்” என எச்சரித்த பின்னரே அவர்கள் இறங்கினார்.

இந்த வீடியோ டிக் டாக் மற்றும் பிற சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்திய பெண்களின் நடத்தை குறித்து கடுமையான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.

ஒருவர், “விமான ஊழியர்களின் கட்டளைகளை மீறுவது ஒரு குற்றமாகும், விமானத்தில் அவர்கள் அதிகாரம் காவலர்களை விட அதிகம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “ஓர் அமைதியான பயணத்திற்கு என்ன பிழை? ஏன் சிலர் விமானத்தில் கூட சலிப்பான மனநிலையில் நடந்து கொள்கிறார்கள்!” என ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம், விமானப் பயணத்தில் ஒழுக்கம் மற்றும் பொறுப்புடன் நடந்து கொள்வது எவ்வளவு அவசியம் என்பதற்கான எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.