மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் தற்போது மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் வகிக்கும் கமல்ஹாசனின் கட்சி போட்டியிடாத நிலையில் தற்போது அவருக்கு திமுக ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கிய நிலையில் நடிகரும் அந்த கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

சமீபத்தில் அவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் பாஜக அவரை கடுமையாக விமர்சித்து வருகிறது. அதாவது கட்சி தொடங்கிய புதிதில் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த கமல்ஹாசன் தற்போது ராஜ்ய சபா சீட்டுக்காக தன்னுடைய கட்சியை அடமானம் வைத்து விட்டார் என விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவும் கமல்ஹாசனை விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அராஜக அரசுக்கு முடிவு கட்டப்படும். இந்து விரோத சக்தியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில் ஒரே நாளில் எட்டு கொலைகள் அரங்கேறியுள்ளது. தற்போது நடக்கும் ஆட்சியில் அனைத்திலும் ஊழல்தான். தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தாலே மாற்றம் ஏற்படும். அதேபோல் தற்போதும் அவர் வருவதால் மாற்றம் ஏற்படும்.

முருகன் மாநாடு நடத்த அனுமதி வழங்கப்படாவிடில் நீதிமன்றத்தை அணுகி அனுமதி வாங்குவோம். கமல்ஹாசன் ஒரு எம்பி சீட்டுக்காக டார்ச் லைட்டை அடகு வைத்து விட்டார். மேலும் பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் 11 ரசிகர்கள் கொண்டாட்டத்தால் உயிரிழந்த சம்பவம் வேதனையை தரக்கூடியது என்று கூறினார்.