இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. ஆனாலும் சிலர் அவசர தேவைக்காக பணத்தை வீட்டில் வைத்திருக்கின்றனர். இதற்கு ஒரு வரைமுறை உள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவான தொகையுடன் அதற்கான ஆதாரங்களுடன் வீட்டில் பணம் வைத்திருக்கலாம். ஆனால் விதிமுறைகளை மீறினால் வருமான வரித்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். அரசாங்கத்தின் விதிப்படி வீட்டில் பணம் இவ்வளவுதான் பணம் வைத்திருக்க வேண்டும் என்று எந்த ஒரு கட்டாயமும் கிடையாது.

ஆனால் நீங்கள் வைத்திருக்கக் கூடிய பணம் எங்கிருந்து வந்தது என்றும் எங்கெல்லாம் செலவு செய்தீர்கள் என்றும் கேள்வி கேட்கப்படும். மிகப்பெரிய ரொக்கத்தை நீங்கள் வைத்திருந்தால் அதற்கான வரியை செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்தக்கூடிய வரிக்கான ஆவணங்களை வைத்திருப்பதால் வரி தொடர்பாக வருமான வரித்துறை கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் உங்களால் பதில் அளிக்க இயலும். உங்களுடைய வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டு அதிக அளவில் பணம் கண்டறியப்பட்டு அதற்கு உரிதான தகவல்களை நீங்கள் தெரிவிக்காவிட்டால் அதற்கான அபராதத்தை செலுத்த வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் பணம் கருப்பு பணமாக அல்லது கணக்கில் வராத பணமாக இருக்கக் கூடாது.

இந்த விதிகளின் அடிப்படையில் மட்டுமே வீட்டில் நீங்கள் பணத்தை வைத்திருக்க முடியும். ஒரு வருடத்திற்கு 20 லட்சம் ரூபாய் மட்டுமே ரொக்க பரிவர்த்தனை செய்ய முடியும். அதற்கு மேல் செய்தால் அபராதம் விதிக்க நேரிடும். ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால் அல்லது எடுத்தால் பான் எண்ணை வழங்க வேண்டும். பான் மற்றும் ஆதார் தகவல்களுடன் நீங்கள் ஒரு வருடத்திற்கு 20 லட்சம் ரூபாய் ரொக்கமாக டெபாசிட் செய்யலாம். மீறினால் அபராத தொகையாக 20 லட்சம் ரூபாய் வரை விதிக்கப்படும். எந்த ஒரு பொருளையும் இரண்டு லட்சத்திற்கும் மேல் நீங்கள் ரொக்கமாக வாங்க முடியாது. தேவை இருந்தால் பான் மற்றும் ஆதார் நகலை கொடுக்க வேண்டும். 30 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை வாங்குவதும் விற்பதும் விசாரணை அமைப்பின் ரேடாரின் கீழ் வரலாம்.