சென்னையில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கலைஞர் உருவம் பொறித்த நாணயத்தில் ஹிந்தி எழுத்து இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு முன்பு அறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோருக்கு நாணயம் வெளியிடப்பட்ட நிலையில் அந்த நாணயங்களில் கூட ஹிந்தி எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது. பொதுவாக எல்லா தலைவர்களுக்கும் வெளியிடப்படும் நாணயங்களில் ஹிந்தி எழுத்து இருக்கும்.‌

இப்படி குற்றம் சாட்டுவதற்கு முன்பாக நாட்டு நடப்பு தெரிந்திருக்க வேண்டும் இல்லை எனில் மண்டையில் கொஞ்சம் மூளையாவது இருக்க வேண்டும். நமக்கு இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் வந்து வாய்த்துள்ளார். கலைஞர் அண்ணாவிற்காக வெளியிடப்பட்ட நாணயத்தில் அவருடைய தமிழ் கையெழுத்தை இடம்பெறச் செய்தார்.

ஆனால் அதிமுகவினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தவில்லை. ஜெயலலிதா அம்மையாரால் உருவாக்கப்பட்டவர்கள் ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தாத நிலையில் அவர்களுக்கு கலைஞரைப் பற்றி பேச தகுதி இல்லை. மேலும் இபிஎஸ் போன்று  ஊர்ந்து சென்று பதவி வாங்கும் பழக்கம் திமுகவிற்கு கிடையாது என்று கூறினார்.