திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே மாவடி பகுதியில் கூலி தொழிலாளியான சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவானந்தம் (7) என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பட்டாணித்துரை என்பவரது மகன் நித்தின் ராஜ் (6) ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

இந்த இரண்டு சிறுவர்களும் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு விஷ வண்டு (கடந்தை) 2 சிறுவர்களையும் கடித்த நிலையில் அவர்கள் வலியில் அலறி துடித்தனர். பெற்றோர் சிறுவர்கள் இருவரையும் வைத்து களக்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் நேற்று அதிகாலை சிறுவன் ஜீவானந்தத்திற்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

உடனடியாக பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மற்றொரு சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.