ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடக்க இருக்கிறது. இந்த போட்டி அடுத்த வருடம் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் இடம் பெற்றுள்ளது. இந்தப் போட்டி பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் நிலையில் பிசிசிஐ தவிர்த்து மற்ற 7 நாடுகளும் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோதும் போட்டிகள் லாகூரில் மார்ச் 1ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி விளையாடினால் இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் பாதுகாப்பு கருதி லாகூரில் நடத்தப்படும். கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பைக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை. மேலும் பிசிசிஐ மத்திய அரசிடம் அனுமதி வாங்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் சென்று விளையாடுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.