
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தங்கம்மாள் (வயது 79) என்ற மூதாட்டி ஒருவர் உருக்கமான மனுவை அளித்துள்ளார்.
தங்கம்மாள் அளித்த மனுவின் படி, அவர் வீட்டில் சமீபத்தில் சுத்தம் செய்தபோது, தனது மகனான செந்தில்குமார் வைத்திருந்த பழைய ₹500 மற்றும் ₹1000 நோட்டுகள் சுமார் ₹15,000 மதிப்பில் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
தங்கம்மாள் மகன் 2018-ஆம் ஆண்டு ஒரு விபத்தில் உயிரிழந்தார். அந்தக் காலத்தில் அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த அந்த பணம் இப்போது கண்ணுக்கு பட்டுள்ளது. இதுகுறித்து மூதாட்டி கடந்த மூன்று முதல் நான்கு முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
“இந்த பணத்தை மாற்றிக் கொடுத்தால், நான் ஒரு பெட்டிக்கடை வைத்து வாழ்வாதாரத்தை நடத்த முடியும். இல்லையெனில், என்னுடைய உயிரையே மாய்த்துக்கொள்வேன்” என அவர் மனுவில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
தங்கம்மாளின் மனுவை பரிசீலிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்பது பற்றி அதிகாரிகள் இதுவரை பதிலளிக்கவில்லை. ஆனால், பழைய நோட்டுகளை மத்திய அரசு ஏற்கனவே செல்லாது என அறிவித்து விட்ட நிலையில், இம்மாதிரியான மனுக்கள் பரிதாபம் ஏற்படுத்தும் வகையில் உள்ளன.