மும்பையின் புறநகர் ரெயிலில், பெண்களுக்கு மட்டும் பயணம் செய்யும் பெட்டியில் நடந்த அதிர்ச்சிகரமான சண்டை சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சண்டையின் வீடியோவை மற்றொரு பெண் பயணி தனது மொபைலில் படம் பிடித்துள்ளார். அதில் பெண்கள் ஒருவரையொருவர் தாக்கி, முடி இழுத்து, கன்னத்தில் அறைந்தும், கடுமையாக சண்டையிட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த சண்டை ஒரு சீட் விவகாரத்தால் ஏற்பட்டதா, அல்லது தனிப்பட்ட சண்டையா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. சில பயணிகள் “சாதாரண இடம் பிடிப்பதற்கான சண்டைதான்” என சொல்கிறார்கள்;

சிலர் “தனிப்பட்ட தகராறால் இது நடந்திருக்கலாம்” என கூறுகின்றனர். இந்த சம்பவம் மேற்குப் பாதை, மத்திய பாதை அல்லது ஹார்பர் பாதையில் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து கல்யான் ரெயில்வே போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளனர். வீடியோவின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவிருக்கிறது. அதில் குற்றத்தில் ஈடுபட்ட பெண்களை அடையாளம் கண்டறிந்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெண் பயணிகளுக்காக சிறப்பாக ஒதுக்கப்பட்ட பெட்டியில் இப்படி ஒரு தாக்குதல் நடந்தது பயணிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.