வேலூர் அடுக்கம்பாறை சேர்ந்த லாரி டிரைவரான பாபு என்பவருடைய மனைவி தமிழரசி. இந்த தம்பதிகளுக்கு அக்ஷயா என்ற 14 வயது மகள் ஒருவர் உள்ளார். இவர்களுக்கு சென்னை ஆவடியில் சொந்தமாக வீடு உள்ள நிலையில் பாபு குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இவருடைய மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் தினமும் பள்ளிக்குச் சென்று வந்தாலும் சரியாக படிக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆசிரியர் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து அக்ஷயா மீது புகார் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழரசி மகளை கண்டித்துள்ளார்.

பள்ளிக்குச் சென்றால் ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்தால் பெற்றோர்கள் என்று மாறி மாறி கண்டித்ததால் விரக்தி அடைந்த அவர் கடந்த மூன்றாம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் மகள் இறந்த துக்கத்தில் சென்னைக்கு செல்லாமல் ஆற்காட்டான் குடிசையில் இருந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தான் கண்டித்ததால்தான் மகள் தற்கொலை செய்து கொண்டார் என்று தமிழரசி தினமும் பாபுவிடம் புலம்பி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தமிழரசி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்த மூன்றாவது நாளில் தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.