கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் மல்லேஷ் நாகரத்தினம்மா. இவரது மகன் மஞ்சுநாத்(15) தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் சாமி தரிசனம் முடிந்து பிரசாத கூடத்தில் சாப்பிட அனைவரும் வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். அங்க கேட் திறந்தவுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மஞ்சுநாத் மீது பலர் ஏறி மிதித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மஞ்சுநாத் சுயநினைவை இழந்து மயங்கி விட்டான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மஞ்சுநாத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மஞ்சுநாத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மஞ்சுநாத் உயிரிழக்கவில்லை, அவருக்கு ஏற்கனவே இதய நோய் இருந்தது என திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.