நடிகர் விஜய் கடந்த 3 வருடங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல் மூன்று இடங்களை பிடித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். அதாவது அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வைரப் பரிசுகள் வழங்கப்படும் நிலையில் 5000 ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த வருடமும் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில் இன்று மூன்றாவது கட்டமாக சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகர் விஜய் இந்த விழாவில் நேரடியாக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிலையில் முதலில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது பேசிய நடிகர் விஜய், அகமதாபாத் விமான விபத்து செய்தியை கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

விபத்து நடந்த இடத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும்போது மனது பதறுகிறது. இது அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை என்று வேதனையோடு கூறினார். மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் என்னை  இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் எனவும் நடிகர் விஜய் கோரிக்கை விடுத்தார்.