
தென்காசியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார், நம் பிரதமர் நரேந்திர மோடியின் அருமை எங்கேயோ இருக்கும் அமெரிக்க அதிபருக்கு தெரிகிறது, ஆனால் இங்கு கடைக்கோடியில் இருக்கும் மக்களுக்கு அவர் பற்றி தெரியவில்லை. இன்று பலரும் புதிதாக பேசி அரசியலுக்குள் நுழைந்து விடுகிறார்கள். தன்னைவிட அதிகம் அரசியல் தெரிந்த நடிகர்கள் சினிமாவில் இல்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் மற்றும் ஆந்திரா என்று தனித்தனியாக எதுவும் சொல்லப்படவில்லை. ஒட்டு மொத்த நாட்டுக்காகவும் தான் செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெருமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக மலர்ந்தே தீரும். பாஜக ஆட்சிக்கு வருவதற்கான காலம் கனிந்து கொண்டு வருகிறது. மத்தியில் நடக்கும் ஆட்சியை பார்த்து உலக நாடுகள் பொறாமைப்படுவதைப் போல தமிழகத்தை பார்த்து ஆச்சரியப்படக்கூடிய நாள் விரைவில் வரும் என்று சரத்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.