அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை ராயப்பேட்டை உள்ள அதிமுக தலைமை கழகத்தில் காணொளி மூலம் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 82 மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தபடியே பங்கேற்றனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் பூத் கமிட்டிகளை முழுமையாக அமைத்து கட்சியை பலப்படுத்துவது பற்றியும் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் திருச்சி உள்பட பல மாவட்டங்களில் திமுக அமைச்சர்களுடன் அதிமுக நிர்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாக எனக்கு தகவல் வந்தது. அது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுப்பேன். அவர்களை கட்சியிலிருந்து நீக்கி விடுவேன் என எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார். இதனையடுத்து அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தின் போது, சென்னை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசிய எடப்பாடி, அமைச்சர் சேகர்பாபுவை புகழ்ந்து பேசியதாக தகவல் வெளியானது. இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.