உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் கோடாரே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தௌலத்பூர் கிராமத்தில் அரியதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 40 வயதான ஹரிஷ்சந்திரா என்பவர், தனது மனைவியான கரிஷ்மாவை, அவளது காதலனான சிவராஜ் சவுகானுக்கு  திருமணம் செய்து வைத்திருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. “அவள் என்னை விஷம் கொடுத்து கொல்ல முயன்றாள். ஆனால் நான் உயிருடன் இருந்தேன். இனிமேல் என் வாழ்க்கையில் எதையும் அவளை செய்ய விடமாட்டேன். அவளுக்கு காதலன் தேவை என்றால் அவருடன் வாழட்டும்,” என கணவர் கூறியுள்ளார்.

15 ஆண்டுகளாக திருமண வாழ்வில் இருந்த ஹரிஷ்சந்திரா மற்றும் கரிஷ்மாவிற்கு ஒரு மகன் (11) மற்றும் ஒரு மகள் (7) உள்ளனர். ஹரிஷ்சந்திரா சூரத்தில் வேலை பார்த்துவந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமீபத்தில் ஊருக்கு திரும்பிய அவர், தனது மனைவியின் கள்ளக்காதல் பற்றி அறிந்தார். கரிஷ்மாவுக்கும், சூரத்திலேயே வேலை பார்த்த சிவராஜ் சவுகானுக்கும் கடந்த ஒரு வருடமாக காதல் உறவு இருந்தது.  கடந்த வியாழக்கிழமை மதியம் வெ ஹரிஷ்சந்திரா மருந்து வாங்க வெளியே சென்றிருந்தபோது அவரது மனைவி தனது காதலனுடன் இருப்பதைப் பற்றி அறிந்தார். வீட்டுக்கு வந்து இருவரையும் கையும் களவுமாகப் பிடித்த ஹரிஷ்சந்திரா, அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்தார்.

இந்த அதிர்ச்சிகரமான முடிவுக்குப் பிறகு, ஹரிஷ்சந்திரா, கரிஷ்மா மற்றும் சிவராஜ் ஆகியோரை  கிராமத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள அல்லிப்பூர் புத்தௌ பாபா கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு கரிஷ்மாவின் தலைமுடியில் இருந்த சிந்தூரத்தை தண்ணீரில் கழுவி, முற்றிலும் உறவைத் துண்டித்தார். பின்னர் பண்டிதர் ஒருவரின் முன்னிலையில், சிவராஜ் கரிஷ்மாவின் தலைமுடியில் சிந்தூரம் வைத்து திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு  பிறகு, கரிஷ்மா தனது மகளை அழைத்துச் சென்றார்; மகன் ஹரிஷ்சந்திராவுடன் தங்கினான்.

இது தொடர்பாக கோடாரே காவல் நிலைய பொறுப்பாளர் பிரபோத் குமார் கூறியதாவது: “இந்த திருமணம் தொடர்பாக எங்களிடம் எந்த எழுத்துப்பூர்வ புகாரும் வரவில்லை. புகார் வந்தால் விசாரணை நடத்தப்படும்.” எனினும், இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, விவாதத பொருளாக மாறியுள்ளது. மேலும் கள்ளகாதலுக்காகக் ஒருவருடன் வாழ ஆசைப்பட்டால், அவளுக்காக தனது குடும்பத்தை விட்டுவிடுவதே நியாயமா?” என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.