கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில் தந்தை, மகன் ஒரே நாளில் உயிரிழந்த செய்தி அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 38 வயதான வினய் குண்டகாவி, தார்வாரின் உப்பள்ளியில் தனது சொந்த மருத்துவமனை நடத்தி வந்தவர். அவருடைய தந்தை, 88 வயதான வீரபத்ரய்யாவும் ஒரு அறியப்பட்ட டாக்டர் ஆவார்.  அவர் ஹாவேரியில் மருத்துவமனை நடத்தி வந்தார். கடந்த 23ஆம் தேதி காலை திடீரென மயங்கி விழுந்தார். அவருடைய மனைவி டாக்டர் என்பதால், உடனே பரிசோதனை செய்தபோது வினய் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

வினய் இறந்த செய்தி அவரது தந்தை வீரபத்ரய்யாவுக்கு தெரிவிக்கப்பட்டதும், மகனின் மரணத்தை தாங்க முடியாமல் துக்கத்தில் கதறி அழுதார். சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு அவரும் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த மருத்தவர்கள் உடனே அவருக்கு சிகிச்சை அளித்தாலும், அவரை காப்பாற்ற முடியவில்லை. அவரும்பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே நாளில் தந்தையும் மகனும் இழந்த அந்த குடும்பம் மிகவும் பெரும் வேதனையில் ஆழ்ந்து கிடக்கிறது.