ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், காதல் திருமணத்தை மறுத்ததால், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்களை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் மதுரவாடா பகுதியில் வசித்துவரும் லட்சுமி (வயது 43) மற்றும் அவரது மகள் தீபிகா (வயது 20) ஆகியோர் இந்த படுகொலையில் உயிரிழந்தனர்.

தீபிகா பட்டதாரி படிப்பை முடித்திருந்த நிலையில், ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த நவீன் (26) என்பவரை காதலித்து வந்தார். இரு குடும்பத்தாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், நவீனின் கஞ்சா பழக்கம் தெரிந்ததும் தீபிகா அவருடன் உறவை முடித்துவிட்டார்.

தீபிகா பேச மறுத்ததால் நவீன், மீண்டும் மீண்டும் அவரது வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள அழைத்தார். ஆனால் தீபிகா அதனை மறுத்ததோடு, “கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான உன்னை திருமணம் செய்ய முடியாது” என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் கொந்தளித்த நவீன், நேற்று மீண்டும் தீபிகாவின் வீட்டிற்கு சென்று, முதலில் லட்சுமியையும், பின்னர் தீபிகாவையும் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டார். இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழ, நவீன் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியார்.

அக்கம் பக்கத்தினர் அலறியபடி ஓடி வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைவில் வந்த போலீசார் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே லட்சுமி உயிரிழந்தார், தீபிகா சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சம்பவத்துக்குப் பிறகு பதுங்கியிருந்த நவீனை, போலீசார் ஸ்ரீகாகுளம் அருகே கைது செய்தனர். காதல் தோல்வி காரணமாக இரட்டை கொலை செய்துள்ள இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.