நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் புகார் கொடுத்த நிலையில் அது தொடர்பாக விசாரணை நடத்தி 12 வாரங்களுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று சென்னை வளசரவாக்கம் காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது நடிகையின் பாலியல் புகார் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் புகார் கொடுத்த நிலையில் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்த நீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் விஜயலட்சுமி சீமானுக்கு எதிரான வழக்கில் தனக்கு நியாயம் கிடைக்கப்போவதில்லை இதுதான் நான் வெளியிடும் கடைசி வீடியோ என்று ஒரு வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, நேற்று வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை பற்றி மக்களிடம் சொல்ல விரும்புகிறேன். நேற்று வந்த தீர்ப்பின்படி செட்டில்மெண்ட் செய்ய கூறியுள்ளனர். இதனால் இனி விஜயலட்சுமிக்கு சீமான் 10 கோடி கொடுத்தார் என்று எழுத ஆரம்பித்து விடுவார்கள். என் மீது அபாண்டமாக பழி சுமத்துவார்கள். உயர்நீதிமன்றத்தில் என்னுடைய வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் மனு தாக்கல் செய்தபோது எனது சார்பாக காவல்துறை தரப்பிலிருந்து ஒரு வழக்கறிஞர் வாதாடினார். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் நேற்று எனக்காக யாருமே வாதாட வில்லை.

நான் சீமானிடம் பேசினால் காசுக்காக தான் செல்கிறேன் என்று கூறுகிறீர்களே எதற்காக எனக்கு ஆதரவாக நேற்று யாரும் வாதாட வில்லை. எனக்கு எந்த நியாயமும் நீதியும் இந்த வழக்கில் கிடைக்காது என்பதை நான் தெரிந்து கொண்டேன். இதைத் தாண்டி நான் எந்த போராட்டமும் செய்யப்போவது கிடையாது. இனி சீமானுக்கு எதிராக பேசவும் மாட்டேன். இதில் இனிமேல் எனக்கு போராடும் அவசியம் கிடையாது. எனக்கு கண்டிப்பாக நீதி கிடைக்காது என்பது தெரிந்து விட்டது. இதுதான் என்னுடைய கடைசி வீடியோ. மேலும் இதுவரை எனக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.