
நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை நடக்க இருக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கராச்சியில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த மைதானத்தில் இந்தியாவை தவிர்த்து மற்ற ஏழு நாடுகளின் கொடிகளும் பறக்க விடப்பட்டுள்ளது. இதில் இந்திய நாட்டின் தேசியக்கொடி மட்டும் பறக்கப்படவில்லை என்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில், “ஏன் கராச்சி மைதானத்தில் இந்திய தேசிய கொடி பறக்கப்படவில்லை என்பது குறித்து தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் பதிவிட்டுள்ளார். அதில், இந்திய அணி சில காரணங்களால் எங்களது நாட்டிற்கு வர முடியாது என்று கூறி இங்கு வந்து விளையாடுவதை தவிர்த்துவிட்டது. அதனால் போட்டிகளை துபாய்க்கு மாற்றினார்கள். அதனால் இங்கு வந்து விளையாட போகும் நாடுகளின் கொடிகளை மட்டுமே ஏற்றியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.