ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயப்பா. இவரது மனைவி  சிரிஷா (25). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திம்மராயப்பா, அதே கிராமத்தைச் சேர்ந்த முனிகண்ணப்பாவிடம் ரூ.80,000 கடன் பெற்றிருந்தார்.

இந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், திம்மராயப்பா தனது மனைவியும் குழந்தைகளையும் விட்டுவிட்டு கிராமத்தை விட்டு சென்றுள்ளார்.

அதன்பின் சிரிஷா தனியாக கூலி வேலை செய்து இரண்டு பிள்ளைகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் சாலையில் நடந்து சென்ற சிரிஷாவை முனிகண்ணப்பா மற்றும் அவரது மனைவி வழியில் தடுத்து நிறுத்தி, “கடனைத் திருப்பிக் கொடுக்காமல் எங்கே போகிறாய்?” என்று ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.

பின்னர், அவரை இழுத்துச் சென்று வேப்ப மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். இச்சம்பவத்தை கண்ட கிராம மக்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ பதிவு செய்துள்ளனர். அப்போது முனிகண்ணப்பா அவர்களையும் தாக்கியுள்ளார்.

இதையடுத்து, தகவலறிந்த பொதுமக்கள் குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முனிகண்ணப்பா மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.