
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், சமீபத்தில் உக்ரைன் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளன. சமீபத்திய தாக்குதலில், உக்ரைன் 117 ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவின் பல விமானப்படை தளங்களை குறிவைத்து தாக்கியுள்ளது. இதில், ரஷ்யாவுக்குச் சொந்தமான 30 போர் விமானங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. இது போர் தொடங்கி இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய சேதமாகவும், உக்ரைனின் பலமான பதிலடியாகவும் கருதப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றிய கிரீமியாவையும், ரஷ்யாவையும் இணைக்கும் 12 கி.மீ. நீளமான பிரமாண்ட பாலம் ‘கெர்ச் பாலம்’ என அழைக்கப்படுகிறது. இதில் ஒரு பக்கம் ரயில் போக்குவரத்துக்கும், மறுபக்கத்தில் சாலை போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்பாலம் மீது உக்ரைனின் உளவு அமைப்பான SBU திட்டமிட்ட தாக்குதலை மேற்கொண்டது. பாலத்தின் தூண்களில் நீருக்கடியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு, அதனை வெடிக்கச் செய்து பெரும்பகுதியை தகர்த்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
SBU வெளியிட்ட தகவலின்படி, இந்த தாக்குதலுக்காக கடந்த ஒரு மாதமாக திட்டமிடப்பட்டது. தாக்குதலுக்காக 1,100 கிலோ எடையுள்ள மிக வலுவான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும், பாலத்தின் அடித்தளத் தூண்கள் உட்பட, முக்கிய சுமை தாங்கும் பகுதிகள் பலமாக சேதமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் மேற்கொண்ட ஒரு முக்கியமான உளவுத்துறை நடவடிக்கையாக கருதப்படுகிறது. தொடரும் போர் சூழ்நிலையில், இதுபோன்ற தாக்குதல்கள் இருநாடுகளுக்கிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடியவை என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.