ஆந்திர பிரதேச மாநிலம் மைலாவரத்தில் உள்ள திருவுரு சாலையை சேர்ந்தவர் வேமுலவாடா ரவிசங்கர். இவருக்கு லட்சுமி ஹிரண்யா (9) என்ற மகளும், லீலா சாய்  என்ற மகனும் இருந்தனர். இந்த குழந்தைகள் ஜி.கொண்டூரில் உள்ள மிஷனரி விடுதியில் படித்து வந்தனர்.

கோடை விடுமுறைக்குப் பிறகு தந்தை ரவிசங்கருடன் தங்கியிருந்தனர். வியாழக்கிழமை, ரவிசங்கரின் தந்தை லட்சுமிபதி வழக்கம்போல் வீட்டிற்கு வருகை தந்தபோது, கதவு பூட்டி இருந்ததால் ஜன்னல் வழியாகப் பார்த்தார். அப்போது இரு குழந்தைகளும் படுக்கையில் உயிரிழந்த நிலையில் இருப்பது தெரிந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டில் மூலிகை மருந்து பாட்டில்கள் கண்டுபிடித்தனர். அதனைக் கொண்டு, ரவிசங்கர் தனது குழந்தைகளுக்கு உணவிலோ, ஜூஸிலோ விஷ மருந்தைக் கலந்து கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், வீட்டில் இருந்து தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது.

அதில், “என்னைப் போலவே அனைவரையும் அழைத்துச் செல்வேன், கடன்கள் அதிகம் உள்ளன” என குறிப்பிட்டுள்ளார். ரவிசங்கர் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லவில்லை என்றும், அவரது மனைவி வெளிநாட்டில் வேலைக்கு சென்ற பின்னர், மனஅழுத்தம் அதிகமாக இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

தற்போது ரவிசங்கரின் தொலைபேசி அணைக்கப்பட்ட நிலையில், அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவரது பெற்றோர்கள் மற்றும் சுற்றியுள்ளவர்கள், “தாத்தா பாட்டி குழந்தைகளுடன் இருந்திருந்தால், இந்த துயரம் நடந்திருக்காது” எனக் கூறியுள்ளனர். மைலாவரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.