மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நடந்த கொடூரமான குடும்பக் கொலை ஒரு கிரமத்தில் முடிவுக்கு வந்துள்ளது. 75 வயதான ஓய்வு பெற்ற பாதுகாப்பு காவலர் ஷோப்நாத் ராஜேஷ்வர் சுக்லா, தனது இரண்டாவது மனைவி சாரதா சுக்லாவை சொத்து தகராறு காரணமாக கருப்பு நூலால் கழுத்தை நெரித்து கொன்ற குற்றத்தில் குற்றவாளி என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளார். இதற்கான தண்டனையாக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையில் மாநில கூடுதல் அமர்வு நீதிபதி வி.எல். போசலே, “இது வெறும் கோபத்தில் நடந்த கொலை அல்ல, திட்டமிட்டு நடந்த சதி” எனக் கூறினார். சராதா உடல்நிலை மோசமாக இருந்த நிலையில், அவரை தவறாக பராமரித்து, பல மாதங்கள் மருந்து வழங்காமலும், உணவின்றியும் சித்திரவதை செய்து, இறுதியில் கழுத்தை நெரித்து கொன்றார் என நீதிமன்றம் கூறியது.

கடந்த 2019 நவம்பர் 8-ஆம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், கருப்பு நூலை பயன்படுத்தி தனது மனைவியை படுக்கையில் கழுத்தை நெரித்துக் கொன்றார். பிரேத பரிசோதனையில் அவரது கழுத்தில் 16 செ.மீ நீளத்தில் நூல் வைத்த குறியுடன் கூடிய அடையாளம் கண்டறியப்பட்டது. மேலும் அவரது உதடுகளில் இரத்தம் காணப்பட்டது.

சாரதா விதவையாக இருந்ததையடுத்து ஷோப்நாத்தை திருமணம் செய்து கொண்டிருந்தார். சொத்துப் பிரச்சனையில், சாரதா தனது பங்கை தன் மகனுக்கு அளிக்க விரும்பினார். ஆனால் ஷோப்நாத், அந்த சொத்து தனது முதல் திருமணத்தில் பிறந்த மகனுக்கு செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்ததால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஷோப்நாத்தின் வயதைக் கருத்தில் கொண்டு அவரது தரப்பு, கருணை மனு தாக்கல் செய்தது. ஆனால், நீதிமன்றம், “இது பராமரிப்பின் மீது வைத்திருந்த நம்பிக்கையை துரோகமாக பயன்படுத்திய சம்பவம். வயது கருணைக்கு தகுதி அளிக்காது” என்று கூறி ஜாமீனை நிராகரித்தது.

இந்த வழக்கு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் தனது வாழ்க்கைத்துணையை சொத்துக்காக கொலை செய்வது என்பது மிகவும் கொடூரமானதாகவும், சமூகத்தில் பாதுகாப்பிற்கும் நம்பிக்கைக்கும் பெரும் கேள்விக்குறியாக இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.