
தமிழக சட்டப்பேரவையில் 2024- 25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்ற திருக்குறளுடன் வேளான் பட்ஜெட்டை உரையை தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அவர் ஆற்றிய உரையில், 2020-2021ம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 45 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பணிகளுக்கான ஊதியம் தற்போது அதிகமாக உள்ளது. இதனை எதிர்கொள்ள வேளாண் பணிகளுக்கு தேவையான அனைத்து வகையான வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
கலைஞர் வேளாண் திட்டம் 7,075 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, வேளாண் பொருட்களை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்கிறது. இயற்கை பேரிடர் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ரூ. 380.40 கோடி நிவாரணமாக 4.5 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மண்வளத்தை பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர் வேளாண்மை போன்ற அனைத்து செய்முறைகளையும் ஊக்கப்படுத்த ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்.இரண்டு லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில் 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் தயாரிக்க ரூபாய் 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூபாய் 208.20 கோடி நிவாரணம் விரைவில் வழங்கப்படும். 2.7 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும். ரூ 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பொறுப்பை அரசை ஏற்றது என தெரிவித்தார்.