தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிஷ் (20). இவர் உள்ளூரில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று அவரது நண்பர் ஒருவருடன் கடைக்கு செல்ல வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றார்.

அந்த வாகனத்தில் பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. வண்டி வேகமாக செல்லும் போது நிலத்தின் மேடு பள்ளங்களில் பைக்கின் அதிர்வு காரணமாக அந்த பாம்பு திடீரென வெளியே வந்து ஹரிஷின் நண்பரின் கையில் ஏறியது.

பாம்பைப் பார்த்து அச்சமடைந்த நண்பர் அதை தட்டியவுடன், அந்த விஷப்பாம்பு பின்சென்று ஹரிஷின் மீது விழுந்து கையில் கடித்தது. உடனே நண்பர், ஹரிஷை அருகிலுள்ள கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

டாக்டர்கள் கொடிய விஷம் பரவியிருப்பதாக கூறி, ஹரிஷை மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். அதற்குள் ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.