
தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
நேற்றைய நிலவரப்படி நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கில் 590 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 710 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 800 கிலோமீட்டர் தொலைவிலும் அது நிலை கொண்டிருந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கில் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் இன்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புதுச்சேரி சென்னை இடையே கரையை கடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இன்று புயல் கரையை கடப்பதால் கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதிக கன மழை எதிர் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தமிழ்நாடு பேரோடர் மீட்பு குழு ஆகியவை வந்தடைந்தது. உதவி ஆய்வாளர் சஞ்சீவ் தலைமையில் 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவும், உதவியாளர் ராஜகோபால் தலைமையிலான தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவும் கடலூர் வந்தடைந்தது. மீட்பு குழுவினர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமாரை சந்தித்து முகாமிற்கு சென்றடைந்தனர்.