
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ரமணம்மா. இவர்களுக்கு வினிலா (வயது 17) மற்றும் அகிலா (வயது 16) என இரண்டு மகள்கள் உள்ளனர். வினிலா, சில மாதங்களுக்கு முன்பு காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மீண்டும் கண்டுபிடித்து, அறிவுரை கூறி வீடு திரும்ப அழைத்துவந்தனர்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, குடும்பம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரத்தில் உள்ள பாலாப்பூர் பகுதிக்கு குடிபெயர்ந்தது. அங்கு சென்று வாழ்ந்து வந்த நிலையில், இரு சகோதரிகளும் பெற்றோரின் அறிவுரையைக் கேட்காமல் மீண்டும் பழைய பழக்கங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். பெற்றோரின் கண்டிப்பில் மனமுடைந்த வினிலா மற்றும் அகிலா, நேற்று தங்கள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த துயரச் சம்பவத்தை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.
தகவலறிந்த ஐதராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இளம் பருவத்தில் உயிரிழந்த சகோதரிகளின் மரணம், பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மன வலியை ஏற்படுத்தியுள்ளது.