18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றது.

இதனைத் தொடர்ந்து வீரர்கள் பெங்களூரு நகரில் ஊர்வலம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சின்னசாமி மைதானத்திற்கு வந்த கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்களின் கூட்டம் அலை மோதுவதால் பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சின்னசாமி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் நிலையில் வெளியே கூட்ட நெரிசல் அலை மோதுகிறது. முதலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த கூட்டம் நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்ராமையா ஆர்சிபி, வெற்றி விழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது ஆர்சிபி வெற்றி விழா நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடிவிட்டனர்.

இந்த துயர சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஆனால் இதை வைத்து மாநில பாஜக அரசியல் செய்கிறது. இந்த கூட்டணி நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் தான். காயமடைந்த பொதுமக்களின் சிகிச்சைக்கான செலவை அரசை ஏற்கும். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.