
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்கா நேரடியாக களமிறங்கி ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களை தாக்கியுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற இந்த தாக்குதலில், ஈரானின் மூன்று முக்கிய அணு ஆயுத மையங்கள் – ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் – தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமிதமாக பேசியுள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு தனது X -பக்கத்தில் பதிவு வெளியிட்ட டிரம்ப், “ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது நாங்கள் மிகச் சிறப்பாக தாக்குதல் நடத்தினோம். அனைத்து போர் விமானங்களும் பாதுகாப்பாக வான்வெளியை விட்டு வெளியேறின. இத்தகைய சவாலான நடவடிக்கையை உலகில் வேறு எந்த ராணுவமும் செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நமது வீரர்கள் மிகுந்த துல்லியத்துடன் செயல்பட்டனர். உலகில் எந்த நாட்டுக்கும் இல்லாத ராணுவ ஆற்றல் அமெரிக்காவுக்கு உண்டு. இப்போது அமைதிக்கான நேரம் இது” எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் மற்றும் படங்கள் உலகளவில் பரவத் தொடங்கியுள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்குவதே இந்த தாக்குதலின் நோக்கம் எனக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையின் பின்னணியில், ஈரான் தொடர்ச்சியாக இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.
இதன் மூலம், அமெரிக்கா இஸ்ரேலுக்கு உறுதியான ஆதரவை வழங்கியுள்ளதோடு, ஈரானுக்கு எதிராக எதிர்காலத்திலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயார் என்ற செய்தியையும் வெளிக்கொண்டு வந்துள்ளது. தற்போது, ஈரான் இந்த தாக்குதலுக்கு எப்படி பதிலளிக்கப்போகிறது என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருவதோடு கவலையையும் அதிகரித்துள்ளது.