திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காவல்துறையினருக்கு செம்மரக்கட்டைகள் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் வாகன சோதனை ஈடுபட்டனர்.

அப்போது அந்த சாலையில் வந்த ஒரு காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. காரை ஓட்டி வந்தவர் ஜமுனமரத்தூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(24).

இவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது செம்மரக்கட்டைகளை ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வந்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து கடத்திவரப்பட்ட 8 செம்மரக்கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கடத்தலுக்கு உபயோகித்த காரை பறிமுதல் செய்து ஓட்டுனரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.