செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அதிமுக செயலாளராக பதவி வகித்த தினேஷ் குமார் கத்தியால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி கழகச் செயலாளர் தினேஷ் குமார் தாக்கப்பட்டதை கண்டித்து எனது அறிவுறுத்தலின்படி நேற்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் போராட்டத்திற்கு தலைமை தாங்க இருந்த கழக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமாரையும், ஆறுமுகம் மற்றும் அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமாரவேல் மற்றும் தொண்டர்களை திமுக அரசின் ஏவல் துறையால் கைது செய்துவிட்டது கண்டனத்திற்குரியது.

திமுக அரசு தன் ஆட்சியின் அவலங்கள் மக்களுக்கு தெரியவே கூடாது என்ற பிரதான எதிர்க்கட்சியின் குரலுக்கு பயந்து அதனை ஒடுக்குவதில் மட்டும்தான் தெளிவாக இருக்கிறதே தவிர ஆக்கபூர்வ அரசாட்சி செய்து மக்களை காக்கும் எண்ணம் துளியும் கிடையாது. அதிமுகவை கண்டாலே இந்த திமுக அரசுக்கு அச்சம் ஏற்பட்டு நடுங்குவது என்பது நாடறிந்த உண்மை என்றாலும் ஆர்ப்பாட்டத்திற்கு முன் அதிமுக அமைப்புச் செயலாளரையும் மாவட்ட கழகச் செயலாளரையும் கைது செய்வது கோழைத்தனத்தின் உச்சம். தினேஷ் குமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கைது செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.