பஞ்சாப் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 13-ஆம் தேதி சப்வேவால் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் சப்பேவால் சட்டசபை தொகுதியின் ஆமா ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக முதல் மந்திரி பகவந்த் மான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பிரச்சார கூட்டத்தில் கூறியதாவது, இந்த பிரச்சார கூட்டத்தில் பெண்கள் அதிகமானோர் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

எங்களது பிரச்சார கூட்டத்தில் மட்டுமே பெண்கள் அதிகம் பங்கேற்கின்றனர். இதற்குக் காரணம் ஆம் ஆத்மி அரசு பெண்களின் தேவைகளை தெரிந்து கவனித்துக் கொள்கிறது. எங்களது அடுத்த திட்டம் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ரூபாய் 1,100 வழங்குவதே ஆகும். இவ்வாறு கூறினார். ஆனால் கடந்த 2022-ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெண்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை வாக்குறுதியாக கொடுத்தது.

2022 தேர்தலில் ஆமா ஆத்மி வெற்றி பெற்று முதல் மந்திரி ஆக பகவந்த் மான் பொறுப்பேற்றும், பெண்களுக்கு மாதம் தோறும் 1000 வழங்கும் திட்டத்தை இன்று வரை தொடங்கவில்லை. இதுகுறித்து 2024 மே மாதம் நடந்த பொது நிகழ்ச்சியில்  முதல் மந்திரி பகவந்த் மான், பெண்களுக்கு 1000 ரூபாய்க்கு பதிலாக 1100 வழங்குவோம் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.