சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கி வரும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் மகாவிஷ்ணு பேசினார்.

இதனையடுத்து மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்று திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கு முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று அவர் பேசினார். இதனால் கோபமான மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் அவரின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தார். அதற்கு அவர் ஆசிரியரிடம் மோசமாக நடந்து கொண்ட வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்பி சு.வெங்கடேசன் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, பாஜக ஆளும் மாநிலம் ஒன்றில் ஓராண்டுக்கு முன் நாடாளுமன்ற கல்வி நிலைய குழு ஆய்வு மேற்கொண்டோம். அங்கன்வாடி ஊழியர்கள் கிராமத்தில் இருக்கும் கோயில்களை தூய்மைப்படுத்தும் பணி மற்றும் குழந்தைக்கு போதிப்பதை பற்றியும் கேள்வி எழுப்பினோம். அப்போது அந்த மாநில தலைமை கல்வி அதிகாரி கோயிலில் பாவ புண்ணியத்தை பற்றி போதிக்காமல் ஒருவனுக்கு வாழ்வியலை எப்படி போதிக்க முடியும் என கேட்டார்.

இன்று அதே கேள்வியை தமிழ்நாடு அரசு பள்ளியில் சிறப்பு விருந்தினராக வந்த ஒருவர் கேட்கிறார். மறுப்பு தெரிவிக்கும் ஆசிரியை பார்த்து உங்கள் பெயர் என்ன என கேட்கிறார். அந்த ஆசிரியரின் பெயர் ஜான்சனாகவோ ஜாகீர் உசேனாகவோ இருந்திருந்தால் இன்று முதல் பள்ளிக்கல்வி பற்றிய பிரச்சனை ரவியிடமிருந்து எச்.ராஜாவுக்கு மாற்றப்பட்டு இருக்கும். அவர்கள் தெரிந்து தான் இதை செய்கிறார்கள். எது நல்லது என்பதை தமிழ்நாடு அரசின் கல்வித்துறை செயலில் காட்ட வேண்டிய நேரம் இதுதான் என கூறியுள்ளார்.