
சென்னை கோபாலபுரம் பகுதியில் இருக்கும் ஸ்ரீ வேணுகோபாலசாமி கோவிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்துவிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, திமுக ஆட்சியில் இருந்து இறங்க வேண்டும் என்பதே எங்களது ஒரே குறிக்கோள்.
வருகிற செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி வரை எங்களது முழு கவனமும் உறுப்பினர் சேர்க்கை மேல் தான் இருக்கும். பிரபல நடிகரான ரஜினிகாந்த் திமுகவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் திமுக ஆலமரம் போன்றது என கூறினார். தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் அப்படி தான் ஆலமரம் என்றார்கள். ஆனால் அங்கு ஆட்சி மாறி இருக்கிறது. ரஜினிகாந்த் திமுகவில் புயலையும் சுனாமியையும் உருவாக்கி விட்டார்.
அந்த கட்சிக்கு கடுமையாக உழைத்த துரைமுருகன் ஸ்டாலினுக்கு கீழும் அடுத்ததாக உதயநிதிக்கு கீழே இருக்க வேண்டி இருக்கிறது. இதைத்தான் வாரிசு அரசியல் வேண்டாம் எனக் கூறுகிறோம். உதயநிதி ஸ்டாலின் துரைமுருகனின் பேச்சை மட்டும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கூறியிருக்கிறார். அப்போ ரஜினிகாந்த் பேசியதை சீரியசாக எடுத்துக் கொள்ளலாமா என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சீனியர்கள் பலரிடம் இருந்த பொறுப்புகள் தற்போது மற்றவர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டிருப்பதை திமுக தொண்டர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தற்போது பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. மூத்தவர்களுக்கு பாஜகவில் அதிகம் மரியாதை இருக்கும். இதனால் பாஜகவில் உறுப்பினராக சேர்ந்து கொள்ளுங்கள். கலைஞரின் வீட்டிற்கு முன் நின்று அவர்களையே விமர்சனம் செய்யும் அளவுக்கு பாரதத்தில் ஜனநாயகம் இருக்கிறது என தமிழிசை கூறியுள்ளார்.