
ஜப்பானின் ஃபுகுயோகா மாகாணத்தில் ஒரு 20 வயது இளம்பெண் தனது அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வீடு திரும்பிய போது, அவரது படுக்கையறையில் உள்ளாடை மட்டும் அணிந்திருந்த தனது 47 வயது முதலாளியை கண்டதுடன் அதிர்ச்சியடைந்தார். அவர் உடனடியாக அறையின் கதவை பூட்டிவிட்டு போலீசாருக்கு தகவல் வழங்கினார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரை வீட்டருகே கைது செய்தனர்.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட முதலாளி, அந்தப் பெண்ணை விரும்புவதாகவும், அவளிடம் நெருக்கமாக பழக விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, அவர் அந்த வீட்டிற்குள் எவ்வாறு நுழைந்தார் என்பதிலே சந்தேகம் எழுந்துள்ளது. போலி சாவி பயன்படுத்தப்பட்டதா அல்லது கதவின் பாதுகாப்பு சீர்குலைந்திருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அந்த அறையில் மறைவாக கேமரா பொருத்தப்பட்டதா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
இச்சம்பவம் தற்போது ஜப்பானில் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் குறித்து புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரியில் மசாஹிரோ நகாய் சம்பவத்தைத் தொடர்ந்து, பல ஜப்பானிய பெண்கள் தங்களுடைய துன்புறுத்தல் அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்த நிலையில், தற்போது நிகழ்ந்த இந்த சம்பவம், பெண்களின் பாதுகாப்பு மீதான பெரும் கேள்விகளை எழுப்பி உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.