மத்திய பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து ரேவா நோக்கி ஒரு லாரி ஆஸ்பெட்டாஸ் கூறைகளை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது மௌகஞ்ச் மாவட்டத்தில் இருந்து நைகர்ஹியை பகுதியை சேர்ந்த 10 பேர் கங்கையில் குளித்துவிட்டு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

ஆட்டோவிற்கு முன்னால் லாரி சென்ற நிலையில் ஒரு வளைவில் லாரி திரும்பியபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி உருண்டது. இதனால் லாரி கவிழ்ந்து ஆட்டோ விபத்துக்குள்ளானது . இந்த நிலையில் லாரியில் இருந்த ஆஸ்பெட்டாஸ் கூரைகள் ஆட்டோ மீது விழுந்ததால் ஆட்டோவில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர்.

அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஹிரலால் ஜெய்ஸ்வால்(65), அவரது மகன் ராம்ஜித் ஜெய்ஸ்வால்(38), மருமகள் பிங்கி(35) பேத்தி அம்பிகா(8) மற்றும் பிரவீன்(12), மான்சி(7), அரவிந்த்(6) ஆகிய 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆட்டோவில் பயணித்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான குடும்பத்திற்கு தலா 2 லட்சமும்,  விபத்தில் காயமடைந்ததற்கு தலா 1 லட்சமும் நிவாரண நிதி வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல் மந்திரி மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.