
வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்களில் நடனம் ஆடினால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி தமிழக இளம் பெண்களை அழைத்துச் சென்ற விபச்சாரத்தில் தள்ளும் கொடுமை நீண்ட காலமாக அரங்கேறி வருகிறது. அதன்படி சமீபத்தில் விபச்சாரத்தில் சிக்கி தமிழகம் தப்பி வந்த இளம் பெண் ஒருவர் இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஒரு குறிப்பிட்ட விபச்சார கும்பல் இது போன்ற கொடுமையான செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த கும்பல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த இளம் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி குறிப்பிட்ட விபச்சார புரோக்கர் கும்பலை சேர்ந்த பிரகாஷ்ராஜ் என்ற 24 வயது இளைஞர், ஜெயக்குமார் என்ற 40 வயது நபர் மற்றும் ஆபியா என்ற 24 வயது இளம்பெண்ணை கைது செய்தனர். இவர்கள் ஏராளமான இளம் பெண்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பி விபச்சாரத்தில் தள்ளியது தெரியவந்தது.
மேலும் இந்த வழக்கில் நான்கு முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். வெளிநாட்டில் ஹோட்டலில் நடனமாட அழைத்துச் சென்று இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.