நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அந்த கட்சியிலிருந்து விலகியதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சமீப காலமாகவே காளியம்மாள் அந்த கட்சியிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் அதிகாரப்பூர்வமாக அதனை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இத்தனை நாட்கள் என்னுடன் உண்மையாய் உறவாய் பழகிய பயணித்த அத்தனை உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு வருத்தங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். நான் இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு இதனை எழுதுகிறேன். கட்சிக்காக ஒவ்வொரு கணமும் உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்து என் குடும்பத்திற்கு மேலாக நேசித்தேன்.

இந்த ஆறு ஆண்டுகால பயணம் அரசியல் ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பல உறவுகள் அக்கா தங்கையாகவும் அண்ணன் தம்பியாகவும் கிடைத்ததை அவர்கள் என்னுடன் பழகிய விதங்களையும் எண்ணி மகிழ்கிறேன். நான் இத்தனை நாட்களாக மிகவும் கடினமாக உழைத்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த அறிக்கையில் ஒரு இடத்தில் கூட அவர் சீமானின் பெயரை சொல்லவே இல்லை. மேலும் சீமான் மீது கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகள் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலையில் தற்போது காளியம்மாள் சீமானின் பெயரை சொல்லாமலேயே அந்த கட்சியிலிருந்து விலகி உள்ளதால் அவர் மீது அவ்வளவு கோபமா என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.