அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவி ரஞ்சனி சீனிவாசன், அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளார். அமெரிக்கா நடத்தும் விசாரணையின் படி, பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் அவர் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, மார்ச் 5ஆம் தேதி, அவரது மாணவர் விசா ரத்து செய்யப்பட்டது. அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட தகவலின்படி, வன்முறை மற்றும் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக அவரின் விசா ரத்து செய்யப்பட்டது என கூறப்படுகிறது. இதனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் முன்னரே, அவர் மார்ச் 11ஆம் தேதி தன்னிச்சையாக நாட்டை விட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் கருத்து தெரிவித்து, “வன்முறையை ஆதரிக்கும் எவருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் உரிமை இல்லை. அமெரிக்காவில் வசிக்கவும், படிக்கவும் வழங்கப்படும் விசா என்பது ஒரு சிறப்புரிமை. ஆனால், யாரேனும் பயங்கரவாதத்தை ஆதரித்தால், அந்த உரிமையை ரத்து செய்ய அமெரிக்க நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் உள்ளது,” என்று தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவில் தங்கியிருந்தால், ரஞ்சனி சீனிவாசன் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொண்டிருக்க வாய்ப்பு இருந்ததாகவும், அவரின் நாட்டைவிட்டு வெளியேறுதல் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பல பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடந்தன. கொலம்பியா பல்கலைக்கழகம் இந்த போராட்டங்களின் மையமாக இருந்து வந்த நிலையில், பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் மாணவர் மஹ்மூத் கலீல் சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கிரீன் கார்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், நீதிபதி ஒருவர் அவரது நாடுகடத்தலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இந்த சம்பவங்களால், அமெரிக்காவில் இனி பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.