
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை முதல் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதலே விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில் மேற்கண்ட 3 மாவட்டங்களுக்கும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதேபோன்று புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி, நெல்லை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று காரைக்கால் மாவட்டத்திலும் இன்று காலை 10 மணி வரையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.