
டெல்லியைச் சேர்ந்த 25 வயது நிலேஷ் என்ற பெண், தனது காதலன் சதேந்திராவால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 30ஆம் தேதி காலை, பில்குவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கால்வாயில் கிடைத்த ஒரு சூட்கேஸில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், டெல்லியில் மயூர் விஹாரைச் சேர்ந்த நிலேஷ் என அந்நபர் அடையாளம் காணப்பட்டார்.
இதனையடுத்து நிலேஷின் காதலன் சதேந்திராவை கைது செய்ததும், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே ரூ.5 லட்சம் பரிவர்த்தனை தொடர்பான மோதல் இருந்ததாக தெரிகிறது.
சதேந்திரா அந்த பணத்தில் கார் வாங்கியிருந்தார். பணத்தை திருப்பிக்கொடுக்குமாறு நிலேஷ் அழுத்தம் கொடுத்ததையடுத்து, மே 28ஆம் தேதி சதேந்திரா தன்னுடைய அறைக்கு அழைத்து சென்று, துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றதாக கூறியுள்ளார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, நிலேஷின் உடலை ஒரு பெரிய சூட்கேஸில் அடைத்து, இரவு நேரத்தில் தனது காரில் ஹபூர் அருகே உள்ள வெறிச்சோடிய கால்வாயின் அருகே வீசினார். மேலும், அவருடைய மொபைல் போனை உடைத்து காஜிபூர் அருகே உள்ள வடிகாலில் வீசியதாகவும் கூறினார்.
போலீசார் அவரிடம் இருந்து நிலேஷின் ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களையும் கைப்பற்றினர். சிசிடிவி பதிவுகளும், சாட்சியங்களும் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்து வருகின்றன.
மேலும் விசாரணையில், பாட்டியாலாவில் வேலைக்குச் சென்றபோது, நிலேஷ் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சதேந்திராவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த சந்தேகமும் கொலைக்குக் காரணமாக இருந்ததாகவும் சதேந்திரா கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.