ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பக்ஷிநகர் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட ஒரு செயல்பாடு தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை போலீசார் கைகளை கட்டி, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து நகரம் முழுவதும் போலீஸ் வாகனத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் வீடியோ வடிவில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காணொளியை பார்த்த பலர் போலீசாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோவில் தெளிவாக, கை கட்டப்பட்ட நிலையில் ஒருவரை தெருக்களில் போலீசார் ஊர்வலமாக அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும், அவர் நகரும் போலீஸ் வாகனத்தின் பானட்டில் அமர்ந்திருப்பதையும் காண முடிகிறது. அவருக்கெதிராக குற்றச்சாட்டு என்னவெனில், ஒரு மருத்துவமனையில் நோயாளிக்கு மருந்து வாங்கியவரை தாக்கி ₹40,000 பணம் இழந்த சம்பவத்தில் இவரே துப்பாக்கியை வைத்து தாக்கி கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.

SSP ஜோகிந்தர் சிங் இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “பக்ஷிநகர் காவல் நிலைய போலீசாரின் செயல் கண்டிக்கத்தக்கது. இது ஒரு ஒழுக்கமான அமைப்பின் படிநிலை அல்ல. இந்நிலையில், சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக துறை ரீதியான விசாரணை நடைபெறும்” என தெரிவித்தார். நகர வடக்கு பகுதிக்கு பொறுப்பான SDPO-க்கு இந்த விசாரணை ஒப்படைக்கப்பட்டு, ஒரு வாரத்தில் முழு அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காவல்துறையின் நெறிமுறைகள் மீறப்பட்டதைக் காட்டும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் சட்டத்தை மீறினாலும், அவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்கப்படவேண்டும். ஆனால் இங்கே, போலீசாரே நேரடியாக “அவமானத் தண்டனை” வழங்கியதால், இது காவல்துறையின்  செயல்படும் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது என சமூக ஆர்வலர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.