எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் போக மற்றொருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் யார் அந்த சார் என்றும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார். இந்நிலையில் அமைச்சர் ரகுபதி மாணவிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவதாகவும் அரசியல் நோக்கத்துடன் பேசி வருவதாகவும் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசியல் இருப்பைக் காட்ட தமிழ்நாட்டு மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி
அருவருப்பு அரசியல் செய்கிறார சேடிஸ்ட் மனநிலையையை பழனிசாமி நிறுத்த வேண்டும்
ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி.
திராவிட மாடல் ஆட்சியில் துணிச்சலாக பெண்கள் புகார் அளிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் புகாரளித்தவர்களுக்கு தினமும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக அவரது நடவடிக்கைகள் மாறி வருகின்றன.
தினமும் அந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் ஊடகங்களில் செய்தியாக்குவதை ஒரு அஜெண்டாவாக வைத்திருக்கும் பழனிசாமியின் நடவடிக்கைகள் பிறரை துன்புறுத்தி மகிழ்ச்சிக்கானும் அவரது சேடிஸ்ட் மனநிலையையை காட்டுகிறது. இனி புகாரளித்தால் நம்மை வைத்து அரசியல் செய்துவிடுவார்கள் என்ற பயத்தை உருவாக்கவே பழனிசாமி திட்டமிடுகிறார்.
ஊடகத்தில் வந்த செய்தி ஊடகத்தில் வந்த செய்தி என சொல்லி வதந்திகளை மட்டும் தானே பரப்பி வந்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வெளிப்படையான நேர்மையான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருப்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.
அரசிடம் நேர்மையும் உண்மையும் இருக்கும் காரணத்தினால்தான் அதிமுக முன்வைக்கும் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் எங்கள் அமைச்சர்கள் எதிர்வினை ஆற்றுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் வெளிப்படையாக பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.
காவல்துறை தான் FIR யை வெளியிட்டுள்ளது என்ற அபாண்ட பொய்யை முதலில் பரப்பினார் அதற்கு அவர் ஆதாரமாக சொன்னதும் பத்திரிகை செய்தி தான். சென்னை மாநகர காவல் ஆணையர் FIR யை காவல்துறை வெளியிடவில்லை ஒன்றிய அரசு IPC யிலிருந்து BNS க்கு மாற்றம் செய்ததால் ஏற்பட்ட டெக்னிக்கல் பிரச்சனையால் FIR வெளியானது என விளக்கம் அளித்தார். ஆனால் அதையும் ஏற்காமல் தொடர்நது பொய் பரப்பி வந்தார் பழனிசாமி. தற்போது FIR கசிந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று ஒன்றிய அரசின் NIC (National Informatics Centre) அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. இப்போது அற்பத்தனமாக பொய் பேசிய பழனிசாமி, நியாயமாக மக்கள் முன் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் ஆனால் கேட்டாரா இல்லை அடுத்த பொய்க்கு தாவிவிட்டார்.
குற்றவாளி ஞானசேகரன் ‘சார்?’ என்று யாரிடம் ஃபோனில் பேசினான் என்று கேட்டார்கள். அவன் அந்த மாணவியை மிரட்டுவதற்காகவே அப்படி போனில் பேசுவதாக நடித்திருக்கிறான் என காவல்துறை ஆணையர் விளக்கியிருக்கிறார். விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என அரசு உத்தரவாதம் அளித்திருக்கிறது. இப்படி உண்மைகள் வெளிப்படையாக வெளி வந்து கொண்டிருக்கின்றன.
உண்மைகளை தாங்கி கொள்ள முடியாமல் அற்ப அரசியலில் ஈடுபடும் பழனிசாமி ஏதையோ மறைப்பதாக உளறி வருகிறார். இந்த வதந்தி அரசியல் எல்லாம் ஒரு நாளும் மக்களிடம் எடுபடாது.
சரித்திரப் பதிவேடு குற்றவாளியை கண்காணிக்காதது ஏன் என பொங்குகிறார் பழனிசாமி கடந்த 2014 முதல் 2019 வரையில் தான் ஞானசேகரன் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளான் அப்போது யார் ஆட்சி செய்தது என்பதை பழனிசாமி மறந்துவிட்டாரா.? பல குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க பழனிசாமி ஆட்சி என்ன முயற்சி எடுத்தது? பாலியல் குற்றம் செய்தவனை வெறும் திருட்டு வழக்கு மட்டும் போட்டு குற்றவாளியை தப்பிக்கவிட்ட மோசமான ஆட்சி தான் பழனிசாமியின் ஆட்சி. அப்போதே கடுமையாக தண்டித்திருந்தால் இன்று இதுபோன்ற நிகழ்வே நடந்திருக்காது.
தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் சேர்ந்து அவர் அரசியல் நாடகம் நடத்தி வருகிறார் பழனிசாமி. அச்ச உணர்வை மாணவிகளிடமும் பெற்றோரிடமும் ஏற்படுத்தும் உள்நோக்கம்
என்னவென்று மக்கள் புரிந்து கொள்வார்கள்.
கூசாமல் பொய் சொல்வதில் பச்சை பொய் பழனிசாமிக்கு நிகர் யாரும் இல்லை என்கிற அளவில்தான் அவர் கூறிய நிகழ்வுகள் இருக்கின்றன. பொள்ளாச்சி வழக்கினை CBI க்கு உடனடியாக மாற்றினேன் என பெருமையாக கூறுகிறார் , அதிமுகவின் முக்கிய புள்ளிகள் மறைமுகமகாவும், அதிமுகவின் பொள்ளாச்சி நகர இளைஞரணி செயலாளர் அருளானதம் முக்கிய குற்றவாளியாக இருந்ததாலும், எடப்பாடி பழனிசாமி மீது துளியும் நம்பிக்கை இன்றி பொதுமக்கள் , மாணவர்கள், எதிர்கட்சிகள் நடத்திய கடும் போராட்டத்தால் CBI யிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் ஒன்றிய பாஜகவோடு அதிமுகவின் கள்ளக்கூட்டணி தொடர்வதால் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் விசாரணை முடியாமலேயே இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.