உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் ஒரு மகன் தனது தாயின் மரணத்தைப் போலியாக சான்றிட முயன்று அரசு வேலை பெற முயன்ற பரபரப்பான சம்பவம் தற்போது பெரும் விவாதத்துக்கு இடமாகியுள்ளது.

8வது பட்டாலியனில் சமையல்காரராக பணியாற்றிய சந்திரா தேவி என்ற பெண் உடல்நிலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது மகன் பிரஹ்லாத் சிங் மெஹர், இறந்தவர் சார்பு ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலை பெற போலி இறப்புச் சான்றிதழைத் தயாரித்து சமர்ப்பித்துள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்திரா தேவியின் உடல்நிலை பிப்ரவரி 27ஆம் தேதி மோசமடைந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின், அவரை லக்னோவிலுள்ள பிரபல SGPGI மருத்துவமனையில் ஐ.சி.யு வார்டில் அனுமதித்தனர். ஆனால் அதிர்ச்சியாக, அவரை அவரது மகன் பிரஹ்லாத் உயிருடன் 28ம் தேதி மாலை 5.33 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச் சென்றுள்ளதும், அதே நாளில் அதிகாலை 5.23 மணிக்கே அவர் இறந்ததாக ஒரு போலி சான்றிதழ் தயாரித்து சமர்ப்பித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, PAC முகாமில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த  மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்திரா தேவி, தனது  பசு மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்ப வரவில்லை என்பதால் கவலையில் உணவு  சாப்பிடாமல் இருந்ததால் உடல்நிலை மோசமடைந்தது எனத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. ஆனால், மருத்துவமனையில் அவரை டிஸ்சார்ஜ் செய்ததற்கான சான்றுகள் மற்றும் நேரம் ஒப்பிட்டுப் பார்க்கையில், அவரது மரண சான்றிதழ் முற்றிலும் போலியானது எனத் தெரியவந்துள்ளது.

தற்போது, பிரஹ்லாத் தனது தாயின் மரணத்தை போலியாகக் காட்டி, அரசு வேலை பெற நினைத்த சம்பவம் சீரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. கான்ட் காவல் நிலையத்தில் மோசடி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சந்திரா தேவி உண்மையில் எப்போது, எந்த சூழ்நிலையில் இறந்தார் என்பதை உறுதி செய்யும் விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

உண்மையை அம்பலப்படுத்தும் நோக்கத்தில் மருத்துவமனை பதிவுகள், வீடியோ காட்சிகள், சாட்சிகள் உள்ளிட்டவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. மகன் அரசு வேலைக்காக தாயின் உயிரையே பலியாக்கியுள்ளாரா என்ற கேள்வி தற்போது சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.